சிலப்பதிகார வழக்குரை காதை

சிலப்பதிகார வழக்குரை காதை பற்றிய கட்டுரை

கண்ணகி

     இளங்கோவடிகள்  அருளிய சிலப்பதிகாரத்தில், கொலைக்களப்பட்டத் தனது கணவனின் இறப்பிற்கு நீதி கேட்டு கண்ணகி பாண்டிய நெடுஞ்செழிய மன்னனிடம் வாதாடும், வழக்கை உரைக்கும் காதையே இந்த வழக்குரை காதையாம். சிலப்பதிகாரத்தின் உச்ச நிலை இங்கே தான் நிகழ்கிறது. அதன் நுணுக்கங்களை இங்கே நாம் காண முயல்வோம் .

 பாண்டிய மன்னனின் மனைவி கோப்பெருந்தேவியின் தீயக் கனவின் மூலம் வழக்குரை காதை தொடங்குகிறது. கோவலனின் இறப்பைக் கண்ணகி முன்னதாகவே தீயக் கனவின் வாயிலாக அறிந்தது போல் பாண்டிய மன்னனின் இறப்பை மன்னியும் தீயக் கனவின் மூலம் தெரிந்து கொண்டாள்.  கனவில் மன்னனின் வெண்கொற்றக் குடையும் செங்கோலும் தங்கள் நிலை கெட்டு வீழ்ந்ததாம். எட்டுத் திசைகளும் அதிர்ந்ததாம, கடைவாயிலில்  ஓயாத மணியோசை கேட்டதாம், ஞாயிற்றை இருள் விழுங்கியதாம், இரவில் வானவில் தோன்றியதாம், பகலிலே வானின் எரிகொள்ளிகள் பூமியில் வீழ்ந்ததாம். இங்கே இரவில் வானவில் தோன்றுவது கனவாக இருப்பினும், அது ஒரு நாட்டிற்கு நிகழவிருக்கும் பேராபத்தை அறிவிக்கும் சகுனமாகப் பல இலக்கியங்களில் சுட்டப்படுவதைக் காணலாம். தான் கண்ட இந்தத் தீயக் கனவினை மன்னனிடம் கூறும்பொழுதே கண்ணகி வாயிலில் வந்து நிற்கிறாள்.

         "வாயிற் காவலனே! வாயிற் காவலனே! அறிவற்ற இறை முறை தவறிய பாண்டிய மன்னனின் வாயிற் காவலனே!கணவனை இழந்தும் காற்சிலம்பை கையில் ஏந்தியும் வந்திருக்கிறாள் ஒரு பெண் என உன் மன்னனிடம் கூறுக!"  என்று வாயிற் காவலனிடம் சொல்கிறாள். வாயிற் காவலனும் மன்னனிடம் சென்று வந்தவளைப் பற்றிக் கூறும் முன் மன்னனை வாழ்த்துகிறான். " வாழ்க எம் கொற்கை வேந்தனே!  தென்பொதியமலைத் தலைவனே,வாழ்க! செழியனே, தென்னவனே வாழ்க! பழிச்சொல் சேரா பஞ்சவனே வாழ்க!" என்கிறான். இது தான் மன்னனுக்குக் கடைசி வாழ்த்துரையாக அமைந்துள்ளது. இது வரை பழிச்சொல் சேராதவன் இன்று ஒரு பெரும் பழிக்கு ஆளாகப் போகிறான். இப்போது வந்திருக்கும் பெண்ணைப் பற்றிக் கூறத் தொடங்குகிறான்.

      கண்ணகியின் தோற்றத்தைப் பலவகையான தெய்வங்களோடு ஒப்பிட்டுக் கூற முயல்கிறான். "வெற்றிவேலை ஏந்திய கொற்றவை அல்ல", ஆனால் சிலம்பை ஏந்தியுள்ளாள்."ஏழு கன்னிகளில் இளையவளான பிடாரியும் இல்லை", ஆனால் அவளைப்போல் தற்போது எவருக்கும்  அடங்காதவளாகக் காணப்படுகிறாள். "இறைவன் நடனமாட, அதைக் கண்டு களித்த பத்திரகாளி அல்", ஆனால் மன்னனிடம் ஏதோ ஒன்றை வழக்காடி எட்டுத் திசைகளையும் அதிரவைக்க இருக்கிறாள். "எவரும் அஞ்சும் காட்டை விருப்ப இடமாகக் கொண்ட காளியும் அல்ல", ஆனால் அதுபோல் பலரும் அஞ்சும், எதிர்க்க பயங்கொள்ளும் மன்னனை எதிர்க்கத் துணிந்தாள். "தாருக அசுரனின் மார்பைப் பிளந்த துர்க்கை அல்ல", ஆனால் அவளைப் போல் தீயவரை அழிக்கும் எண்ணம் கொண்டாள். "உள்ளக் கறுவும், மிகுந்த சினமும் கொண்டுள்ளாள். பொன்னொளி வீசும் காற்சிலம்பு ஒன்றை கையில் ஏந்தியுள்ளாள். கணவனை இழந்த அவள், நம் வாயிலில் நிற்கிறாள்" என்று முடித்தான்.

        மன்னனும் அவளை அரசவைக்குக் கொணரும் படி கட்டளையிட்டான். வாயிற் காவலனும் கண்ணகியை அங்கே அழைத்துவந்தான். மன்னனோ, கண்ணகியை பார்த்து "இளமையான கொடி போன்றவளே! நீரொழுகும் கண்களுடன் வந்துள்ள நீ யார்?" எனக் கேட்கிறான். வாயிற் காவலன், கணவனை இழந்தவள், ஒற்றைச் சிலம்பை ஏந்தியவள் எனச் சொல்லியும் மன்னனால் கண்ணகி யார் என்று யூகித்தறிய இயலவில்லை.

                கண்ணகி முதல் வார்த்தையிலேயே "ஆராயாத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்று உண்டு!" எனக்   கோபத்துடன் விளித்துக் கூறுவதைக் காணலாம். "வானுலகில் தேவர்களே வியக்கும் படி, ஒரு புறாவின் துன்பத்தைப் போக்க, தானே துலாக் கோலில் ஏறி நின்ற சிபி மன்னனும், இளவரசனின் தேர்க்காலில் அகப்பட்டுக் கன்று  இறக்க, அதன் தாய்ப்பசு அரண்மனை வாயில் மணியை அடித்தது. பசுவின் துயர் அறிந்த வேலையில் கன்று இறந்துபட்ட அதே தேரில் ஏரி, அது இறந்த இடத்திலேயே தனது ஒரே மகனைக் கிடத்தி தேரேற்றி  கொன்று, நீதியை உயர்த்திய மனுநீதி சோழ மன்னனும் ஆண்ட பெரும்புகழ் கொண்ட புகாரே நான் பிறந்த ஊர்" என ஊரைப் பற்றி உரைக்கிறாள்.

                  மூவேந்தர் காலத்தில் எத்தனையோ சோழ மன்னர்கள் இருந்தனர். எத்தனையோ பேர் நல்லாட்சியும்  புரிந்தனர். எனினும் கண்ணகி இவ்விருவரை மட்டும் குறிப்பிடக் காரணம் என்ன? அக்காலத்தில் நீதி வழங்குவதில் புகழ்பெற்றவர்களாக இவ்விருவரே இருந்திருக்கலாம். பலரும் நேர்மையான, சரியான நீதி வழங்கியிருக்கலாம். ஆனால், புறாவிற்காகத் தன்னையே அர்ப்பணிக்கும் துணிவும், தாய்ப்பசுவிற்கு நீதி வழங்க தன்மகனைக் கன்று இறந்த இடத்திலேயே தேரேற்றி கொல்லும் மனப்பான்மை வேறு யாருக்கும் கிடைத்திருக்கவில்லை. தனது நாட்டின் நீதிமான்களைச் சுட்டிக் காட்டி, பாண்டிய மன்னனின் செங்கோலை இங்குக் கண்ணகி மறைமுகமாக வசைபாடியுள்ளாள் என்பதை நாம் அறியலாம். 

          பின் தனது கணவனைப் பற்றிக் கூறுகிறாள். எவரும் "பழிச்சொல்லா பெருங்குடியில் பிறந்தவன், புகார் நகரின் பெருவணிகன் மாசாத்துவான் மகனை மனம் புரிந்தேன்" எனக் கூறுகிறாள். குடிப்பெருமையே அடையாளமான காலம் அது. கோவலன் நல்ல குடிப் பெருமை கொண்டவன் மற்றும் வணிகனின் மகனாதலால்  மாற்றார் பொருளைக் களவாடும் எண்ணம் கொள்ள வாய்ப்புகள் குறைவே. தனது கணவன் கள்வன் இல்லை என  இந்த இடத்தில் கண்ணகி  நிலைநாட்டுவதைக் காணலாம்.

               " ஊழ்வினைப் பயனால் பிழைப்பைத் தேடி உன்னுடைய மதுரை மாநகர் புகுந்தோம். எனது காற்சிலம்பை விற்கக் கடைவீதிக்கு வந்தவன், உன்னால் கொலைசெய்யப்பட்டான். அந்தக் கோவலனின் மனைவி தான் நான்! என் பெயர் கண்ணகி" என்று கூறுகிறாள்.  இதன் மூலம் கோவலனிடமிருந்தது தன்னுடைய சிலம்பு எனவும் தெளிவு படுத்துகிறாள். இப்போது மன்னனுக்கு நினைவு வருகிறது. கொல்லனால் சுட்டிக்காட்டப்பட்டக் கள்வனின் மனைவி எனத் தெரிந்துகொண்டான்". கள்வனைக் கொல்வது கொடுங்கோன்மை அல்ல, அதுவே அரச நீதி " என்கிறான் .

   கண்ணகி இதனைக் கேட்டவுடன் வெகுண்டெழுந்தாள்.  "அறநெறியில் நடவாத அரசனே! கோவலனின் கையில் இருந்தது என் சிலம்பு ,அது மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்கிறாள். கண்ணகியும் பெரு வணிகரின் மகளே, எனவே அவளுடைய சிலம்பு விலையுயர்ந்த மாணிக்கப்பரலை கொண்டது, ஆனால் பாண்டிய நாட்டில் விளைந்த முத்துக்களை, நாட்டின் முன்மாதிரியாகப் பல அரிய வேற்றுநாட்டு மணிகளைத் தவிர்த்து தன் நாட்டு முத்துக்களே  கோப்பெருந்தேவியின்  சிலம்பை அலங்கரித்தது. கண்ணகியின் கூற்றிற்கு மன்னன் "என்னுடைய தேவியின் சிலம்பு கொற்கை முத்துக்கள்" எனக் கூறுகிறான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பையும் கோப்பெருந்தேவியின் சிலம்பையும் எடுத்து வரச் சொல்கிறான்.

              காவலர்கள் அதனை அவை முன் வைத்த அந்த வேலையில், சிலம்பு தன்னுடையது என நிரூபிக்க, சிலம்பினை எடுத்து ஓங்கி தரையில் உடைக்கிறாள் கண்ணகி. உடைத்த சிலம்பிலிருந்து சிதறிய மாணிக்கப்பரல்களில் ஒன்று மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. இதைக்  கண்டபொழுதில் மன்னன் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானான். என்றுமே நீதி வழுவாத ஆட்சி வழங்கியவனின் செங்கோல் இன்று தளர்ந்தது, வெண்கொற்றக்குடை இன்று தாழ்ந்தது. மன்னியின் கனவு பழித்தது.

 "பொற்கொல்லனின் சொல்லைக் கண்மூடித்தனமாகக் கேட்டு, ஒருவரின்  உயிரையே பறித்துவிட்டேனே! உன்னுடைய கணவன் கள்வன் அல்ல, நான் தான் களவன். வழிவழியாகத் தென்புலத்தைக் காக்கும் ஆட்சி, என்னால் சிதைவுற்றதே! நான் வாழத் தகுதியற்றவன், என் ஆயுள் கெடுக!"  என மயங்கி விழுந்தான், உயிர் துறந்தான். கோப்பெருந்தேவி, கணவன் தனது கண்முன்னே இறந்து விழுந்த காட்சியைக் கண்டு நடுங்கிப் போனாள். "கணவனை இழந்தோர்க்கு எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது" எனக் கூறி, கணவனின் திருவடிகளை வணங்கியபின் தானும் உயிர் துறந்தாள்.

             இவ்வாறு வழக்குரைக் காதை முடிவடையும்.  பாண்டிய மன்னன், கள்வனைக் கொல்லுதல் அரச நீதி என வாதத்தில் சொன்னது போல் கோவலனின் உயிரைப் பறித்த குற்றத்திற்காக, தனக்குத் தானே அந்த மரண தண்டனையை விதித்துக்கொண்டு இறந்தான். தன்னால் தாழ்ந்த செங்கோலை உயிர்துறந்து தானே நிமிர்த்தினான். 

Name

கட்டுரை,13,கவிதை,44,சிறுகதை,2,
ltr
item
காவியத்தமிழ்: சிலப்பதிகார வழக்குரை காதை
சிலப்பதிகார வழக்குரை காதை
சிலப்பதிகார வழக்குரை காதை பற்றிய கட்டுரை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIBZnM3tc9EU0caY0VoPhQ8sxpdZPnGye3eJrgWj3PqlI4yoA1HvDRxQlAZan3hYhu5EqmIaMZGDZkPNtfHdKfrERtbqzlks3xkB5sHVmN9yn1X4MeR3I3DO30qHHTUbYVHVIUbdlehUAK/w640-h476/New+doc+30+Aug+2021+10.27+am-1%2528161720376967136%2529.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjIBZnM3tc9EU0caY0VoPhQ8sxpdZPnGye3eJrgWj3PqlI4yoA1HvDRxQlAZan3hYhu5EqmIaMZGDZkPNtfHdKfrERtbqzlks3xkB5sHVmN9yn1X4MeR3I3DO30qHHTUbYVHVIUbdlehUAK/s72-w640-c-h476/New+doc+30+Aug+2021+10.27+am-1%2528161720376967136%2529.jpg
காவியத்தமிழ்
https://www.kaaviyatamil.com/2021/09/Silapadhikaara%20vazhakkurai%20kaathai.html
https://www.kaaviyatamil.com/
https://www.kaaviyatamil.com/
https://www.kaaviyatamil.com/2021/09/Silapadhikaara%20vazhakkurai%20kaathai.html
true
6069112678454011421
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL மேலும் படிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content