தமிழுக்கும், தமிழருக்கும் அன்னையான தமிழன்னையைப் பற்றிய கவிதை
பொதிகை மலை ஈன்று ,
முதுமுனியால் வளர்ந்து ,
பொங்கி வந்த தமிழாற்றில்
சங்கம் என்னும் நாவாய்
தொல்காப்பியக் கரை மோதி
சொல்லாழி பாட்டும் தொகையும் சிதற
அவை இருண்ட காலத்தில் மூழ்கி
நீதி இலக்கியமாய் நீந்தி கரைசேர ,
ஐம்பெருங்காப்பிய அணிகள் கொண்டு
ஐஞ்சிறுங்காப்பிய அழகும் கண்டு ,
பல்வேறு சமயங்கள் பாடிப் போர்கொள்ள
கல்லும் கரையும் கனிச்சுவை தேனமுது
நான்மறை நிகராய் திருமறை விளங்கி,
மால்தனை பாடிய பிரபந்தமாய் நடந்து ,
நற்றமிழ் நாதம் நாற்றிசையும் ஒலிக்க
சிற்றிலக்கியப் பரல்கள் சிதற ஆடி,
புதுக்கவிதை என்னும் அணை உடைத்த
புதுநதியாய் பெறுக்கெடுத்து பாய்ந்து
உரைநடை என்னும் வீர நடை போட்டு ,
சிறுகதை என்னும் சிறுகாவியம் பாடி ,
நவீன கால சொற்றமிழ் நங்கை
புதினம் என்னும் புதுவரவாய் பொலிந்து
பொன்றாது நிற்கும் உன்னை கற்க
குன்றும் ஓராயுள் போதாதே ,தமிழமுதே !
உன்னாயுள் போல் வாழும் வரம்கொடுப்பாய் !!
கன்னித்தமிழை கண்போல் காக்கும் மறம்கொடுப்பாய் !!!