மரங்கள் வெட்டப்பட்டதால் இரு சிறிய சிட்டுக் குருவிகளின் கூடு அழிந்த நிலை கூறும் கவிதை
முட்டையிடும் முன்பே
மூச்சு இருக்கும் முன்பே ,
கூட்டையொன்று கட்டிடக்
குதூகலித்தது ஒருகுருவி !
அடுக்கு மாடிகள்
அத்தனையும் கடந்து,
தடுப்புகள் ,வேலிகள் ,
தத்தளிப்புகளைத் தாண்டி ,
சக்திக்கு ஏற்ற
சிறுசிறு குச்சிகளை ,
சிறுகச் சிறுகச்
சேகரித்து, சீரமைத்துக்
கட்டமைக்கப் பட்டதோர்
சிட்டுக்குருவியின் சிறுகூடு,
கோரைகளும் குச்சிகளும்
கிண்ணவடிவில் அவதரிக்க ,
இட்டுவைத்தது பெண் குருவி
இந்திரலோகத்தில் மூன்றுமுட்டைகள்!
பத்துநாட்கள் அடைகாப்பில்
பொரித்தது இளஞ்சிட்டுகள் !!
புழு பூச்சிகள் எனப் புதுவரவிற்கு
புது இரைகள் பலதேடி ,
பெண்ணும் ஆணும்
பறந்ததுவே கூட்டைவிட்டு !
எவரும் எதிர்பாராமல்,
காற்றிற்கும் சொல்லாமல்
வந்தனர் மானிடர்
தங்களின் பிழைப்பிற்கே !
ஓங்கி உயர்ந்த ஒற்றைமரத்தை ,
ஓங்கி வெட்டியது ஒருகோடாலி ,
இரும்பிற்கு இணையாய் யுத்தம் செய்ய
இயலுமா இற்றுப்போன குச்சிகளுக்கு !
சின்னஞ்சிறு சிட்டுக்கள்
கிண்கிணியாய் கதற,
வீழ்ந்தது பெருமரம் !
கவிழ்ந்தது கட்டடம் !!
மாய்ந்தன சின்னுயிர்கள் ,
ஓய்ந்தன அதன்சப்தம் ,
தாயும் தந்தையும் தங்களின்
வாயில் கவ்விய இரைகள் ,
வீணாகிப் போகும்
விபரீதம் கண்டனர்,
கூடும் அழிந்து
குஞ்சுகளும் இறந்த ,
கோரம் கண்டனர் !
கொடுந்துயர் கொண்டனர் ,
குறுநெஞ்சு துடித்தனர்,கண்ணீரால்
குற்றுயிர் நனைந்தனர் !!
இனி யாது செய்வோம் !
இனி எது மிஞ்சும் !
இரந்து கேட்டனர், இசை மீட்டிய குரலில்
இருவுயிரை மீட்க அல்ல !!
தங்களின் இன்னுயிர்
எச்சங்களையும் ,கிள்ளி
எரிந்துவிட மன்றாடிக்
கேட்டனர் மரவுள்ள மாந்தரிடம் !!!