மழையின் ஒருதுளி நீரில் விழுந்து ஒருசிறிய குமிழியை ஏற்படுத்தி மறுகணமே மறைவது போல் தான் வாழ்வின் நிகழ்வுகள் எனக் கூறும் கவிதை இது
புது உலகம் காணவரும்
புத்துயிரின் அறிவிப்பில் ஒருதுளி !
மறு உயிர் ஈன்றெடுத்த
மாதாவின் புன்னகையில் ஒருதுளி !
விதை மண்முட்டி ,செடியாய்
வளர வழிதந்தது ஒருதுளி !
கரை இரண்டு உடைக்கும்
வெள்ளத்தின் ஆதி ஒருதுளி !
பெருமகன் ஆனான் இவனென
பெருமை பேசும் ஒருதுளி!
கல்வி கற்கக்கற்க கரை
கண்டவனின் அறிவில் ஒருதுளி!
குறை கூறுவார் முன்னில்
பகட்டு நடைகொள்வது ஒருதுளி !
குறைகண்ட நேரம் நாணிக்
குறுகும் வேளை ஒருதுளி !
மண்ணுயிர் கொடுத்த
மாதா ஓய்வில் ஒருதுளி !
இன்னோர் உயிர்கொடுத்த
மனைவி மீதில் ஒருதுளி !
அறியா உறவுகள், சேரும்
வேளையில் ஒருதுளி !
அறிந்த உறவுகள் ,பிரியும்
வேளையில் ஒருதுளி !
எங்கும் எதிலும் பற்றற்று
ஞானம் பொங்கும் வேளை ஒருதுளி !
மங்கும் கண்ணும் வளைந்த
கூனும் பரிசளிக்கும் காலம் ஒருதுளி !
கடந்த கால நிகழ்வுகளின்
காட்சிப்படம் கரைந்தபடி ஒருதுளி !
கிடந்தபடியே காற்றில் யாவும்
கரையும் கடை நொடி ஒருதுளி !