உறக்கம் பற்றிய கவிதை
ஒல்லென்ற ஒலி ,
கும்மென்ற இருள் ,
திருமங்கை கூந்தல் போல்
கனமான இருள்.
யாவர்க்கும் நிழல்தரும்
எண்ணிலடங்கா மரங்கள் ,
இருளிடம் கைக்குலுக்கும் ,
இலைகளால் புன்னகைக்கும் .
பனிக்காலப் புற்களில்
படிந்திடும் துளிகள்போல் ,
வானமகள் வதனத்தில்
மின்னிடும் வெண்பருக்கள்.
மனைச் சாளரங்களில்
மாட்டிய திரைச்சீலைகள் ,
காற்றடிக்க மிரண்டு ,
இருப்பிடம் அகன்று ,
அலைபோல் எழும்பி
அலைக்கற்று ஓய்ந்தபின் ,
இருப்பாரை வருடும்
இன்பமான நேரமதில் ...
நடமாடிய பிணங்களின்
நாடிகள் துடித்திருந்தாலும் ,
இமைகள் செயலிழந்து
மொட்டுக்களாய் மூடிக்கொள்ளும் .
மூளைக்குள் ஏதோவொன்று
கயிறுகட்டாமல் ஊஞ்சலாடும் ,
முற்றும் முடிந்தபின்
கட்டுடலின் தசைகள் உருகும் .
உணர்வில்லா பெருநிலையில்
ஊறு ஓசை அறியாமல்,
வெறும் காற்றை மட்டும்
சுவாசிக்கும் வெற்றுடலில் ,
இறந்தவரையும் பார்க்கும்
என் இனிய இரவுகளில் ,
எப்போதும் காண்கிறேன்
இறப்பின் முன்னோட்டத்தை .....