காகிதத் தாளொன்று , தன்னை எழுதாது இறந்த கவிஞனுக்காக வருந்தியும் , தன் பிறப்பின் பலனை அடைய எண்ணியும் வருந்தி கூறும் கவிதை.
யார் நிரப்புவது ? இனி
என்னை யார் நிரப்புவது ?
எல்லா நாளும் கோட்டை
என்னை என்று எழுதுவான் என்றிருந்தேன்!
எல்லோருக்கும் தலையெழுத்து
இன்றி அமையாதாம் !
எனக்கு மட்டும் தலையெழுத்து
இன்றி அமைந்தது ஏன்?
வானின் உயிரே
நானும் பெறவேண்டும் கருநீல உயிர்தான்!
நேற்றுவரை நான் குடியிருந்த ஏட்டில், அவன்
பார்த்துப்பார்த்து
விளக்கொளியும் விண்வெளியும்
விசாரிக்கும் காலம் முடிந்தது !
இன்று எங்கே போனான், காலம்
வென்று போனானோ? பயணம்
நின்று போனானோ? கடவுள்
மன்றம் போனானோ? காணவில்லை.
உயிரிருக்கும் வரைதான்
உடைமைகளுக்கு மதிப்பு !
வெற்று காகிதமானேன், இனியும்
வெறுமை
நீரோ, விறகு நெருப்போ தீண்டும் முன்னே,
முள்ளோ , கத்திரியோ கிழிக்கும் முன்னே ,
எனது கடைசி ஆசையை
எவரேனும்
என் கோடிட்ட இடங்களை
எவரேனும் நிரப்புங்கள்!