வேரின் அடக்கத்தை வலியுறுத்தும் கவிதை
வேர்விட்டு வளர்ந்தது தான்,
வேராலே துளிர்த்தது தான்!
இலை கொண்ட பெருமை தான்
இன்னதென்று சொல்வதற்கில்லை!
உயர்ந்தவன் நான் என்றதாம்!
உயரம் பார்த்தவன் நான் என்றதாம்!
செடிக்கே படியளப்பவன் நான் என்றதாம்!
நான் நினைத்தால் செடி நாசமாகும் என்றதாம்!
பெருமழை பெய்தாலும் ,
என்னை மாய்ப்பவன்
உலகினில் இல்லை என்றதாம்!
இலையின் இக்கூவல் கேட்டு
இருளில் கிளைபரப்பும்
வேரது புன்சிரிப்பு
வேரேதும்
நீர் இல்லையேல் நானில்லை !
நானில்லையேல் நீயே இல்லை என்றதாம்!
கதிரவன் சுழற்சியில்
காலம் கரைந்திட ,
மாறியது இலையின்
பசுமை வண்ணம்.
செடிதோறும் விருந்தளிக்கும்
செயல்முறை இழந்தது
முதுமை சுமந்து
கிளைக்கு பாரமானது.
மரத்திற்கும்
மாந்தருக்கும் இதன்
பற்றறுக்கும் நிலையில்
முற்றிய இலைகளை,
கட்டவிழ்த்து விட்டது, இலைகள்
வெட்டவெளியில் பறந்தது!
மெல்ல மெல்ல
முன்னும் பின்னும்,
தடுமாறியது இலை.
முதன்முதலாய் மண்ணைத் தொட்டது!
இன்றுதான் மண்ணின் மணம் கண்டது!
தன்னைச் சுமந்த
தன்கடை சுவாசம் கண்டது இலை!
வானைத் தொட்டவனெல்லாம் வாழ்ந்து காட்டியவனல்ல!
மண்ணுக்குள் விரிந்தவனெல்லாம் மாய்ந்தவனல்ல!
இலைபோல நமக்கும்
நாட்கள் தான்!