கூந்தல் வர்ணனை பற்றிய கவிதை
கார்மேகம் பொழியும் மழைத்துளிகள் ,
என்கூந்தல் சிதறிய ஓவியங்கள் !
இசை சில்லிடும் யாழின் நரம்புகள் ,
என்கூந்தல் உதறிய மிச்சங்கள் !
கதிரவன் விரட்டிடும் காரிருள் தனக்கு,
அடைக்கலம் தந்திடும் அரண்மனை என்கூந்தல் !
எங்கும் எதையும் தீண்டிய தென்றல் ,
என்னைத் தீண்டாமலிருக்க இழைவேலி என்கூந்தல் !
மொட்டவிழ்க்கும் புவி வாழ் நறுமலர்கள் யாவும் ,
கூட்டமாய் வந்தமரும் அரியாசனம் என்கூந்தல் !
பொங்கிடும் என்பெண்மை உயர்ந்து,
உச்சியிலிருந்து வழிந்தோடுவது என்கூந்தல் !
கடலலைகள் கரைமோத மறந்து நீண்டு ,
அலையலையாய் அளபெடுக்கும் அந்தக்காட்சி என்கூந்தல் !