நான் யார் என்ற கேள்விக்கு பதில்
என்னை யார் என்று கேட்காதீர் !
உங்களைப் போலவே நானும் ,
வழிதவறி வந்தவள் தான் !
அனுப்புநர் இல்லா கடிதத்தின்
அர்த்தமற்ற புதிர் தான் !
முகவரி இல்லா வீட்டைச்
சுமந்து கொண்டே ஊர்ந்து
தேடும் நத்தை தான் !
உங்களைப் போலவே நானும் ,
உடைந்த என்வதனத் துகள்களை
அள்ளிச் செல்ல வந்தவள் தான்!
கருநீலக் கடலில் தொலைந்த என் ஆவி
தைக்கும் ஊசியைத் தேட வந்தவள் தான் !
முகத்தை மறைத்து எனது
முகவரியைத் தேடவந்தவள் தான்!
உங்களைப் போலவே நானும்
உச்சியில் துளிர்த்த இலையாய்
வேரைத் தேடுகிறவள் தான்!
தொலைந்த என்ஞானத் தேடலுக்காக
இதயத் துடிப்பை இரவல் வாங்கி
வந்தவள் தான் !
என்னை யார் என்று கேட்காதீர் !
உங்களைப் போலவே நானும்...