சிறுகதை
நான் இங்கு என குறிப்பிடும் 'அந்த தெரு ' என்பது , வழக்கமாக எங்கள் வீட்டிலிருந்து சலவைத்துணிகளை இஸ்திரி போட்டுத் தரும் அந்த இஸ்திரிகாரர் தெரு தான். தொழில் பலவகைகள் உண்டு . உடலுழைப்பே இல்லாமல் காசு பார்க்கும் தொழில்கள் ஏராளம் . சில தொழிலாளர்களை நாம் வருத்தி வேலை வாங்குகிறோமோ ,அல்லது நமது சோம்பேறி தனங்களால் ஒருவர் அவதி படுகிறாரோ எனத் தோன்றும் அளவு இருக்கும். அதற்கான ஊதியம் பெரும்பாலும் உழைப்பிற்கு குறைந்த ஊதியமாகவே தோன்றும்.அப்படிப்பட்ட தொழிலாளர்களுள் ஒருவர் இந்த இஸ்திரிகார மாயகண்ணன் .
அவருடைய உடலின் எடையும்,அவரின் சக்தியை உரிந்து ,சூடாகி துணிகளை தேய்த்து தரும் அந்த இஸ்திரிபெட்டியின் எடையும் ஒன்று போலத் தோன்றும் அளவு மெலிந்த தேகம் கொண்டவர். எங்களின் பக்கத்துத் தெருவில் ,அவருடைய கடையிருக்கும் . ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே புகும் பாக்கியம் கொண்டது அவரின் இஸ்திரி போடும் இடம் . அப்படி ஒருவேளை இரண்டு பேர் இருந்தால் அந்த சிறிய அறையில் நெரிசலாகிவிடும்.அவரின் கடைக்கு பின்புறம் சிறிது தூரத்திலேயே அவரின் வீடும் இருக்கும்.
ஒருசில நேரம் அவருக்கு சிரமம் கொடுக்கிறோமோ என்று கூட தோன்றும் .ஆனால் அவருக்கு அப்படி இல்லை . அதை ஒருபோதும் சிரமமாக பார்த்ததில்லை . தான் செய்கின்ற வேலையை சிரமமாக பார்த்தால் அது அந்த தொழிலை அவமதிப்புது போலாகிவிடும் .ஒருவேளை அதை உழைப்பாக பார்த்தால், அந்த உழைப்பே ஒருநாள் நம்மை கௌரவப்படுத்தும் என்பதை அவரிடம் தெரிந்து கொண்டேன்.ஒரு முறை என் அப்பா அவரை மறைமுகமாக பாராட்டியதை நான் அவரைக் காணுபோதேல்லாம் நினைவுகுறுவேன்.
"டேய் ,கண்ணா ! நீ இல்லைனா வீட்டுள இருக்கவங்களுக்கே என்னை அடையாளம் தெரியல டா " என்றார் .இவர் எதைச் சொல்ல வருகிறார் என அந்த இஸ்திரிகாரர் குழம்பி அவரின் அடுத்து என்ன சொல்ல வருகிறார் என கூர்ந்து கவனிப்பார் . " ஆமா ,இல்லாமையா பின்ன , தூரத்துல இருந்தா கூட ,நல்லா வெளுத்த சட்டைல கத்தி மாறி மடிப்ப பாத்தாலே ,நான் வீட்டுக்கு வந்துட்டனு வீட்டுள சுட சுட காபி டேபிள்ல இருக்கும் ,நான் வீட்டுள தேச்சா கூட உன்ன மாறி மடிப்பு வரல" என்று என் அப்பா தன்னை நொந்துகொள்ளும் அதே வேலையில் அவரை பாராட்டியும் கொள்வார்.
அவருக்கு மனைவி ,இரண்டு மகள்கள் என சிறிய குடும்பம் தான்.ஒரு மகள் பன்னிரண்டாம் வகுப்பும் ,இளைய மகள் எட்டாம் வகுப்பும் படித்து வருகிறாள். எனக்கு தெரிந்த வரையில் அவரின் பெரிய மகள் புத்திசாலி . படிப்பில் ஆர்வம் அதிகம். எப்போதாவது அவர் வீட்டிற்கு நாங்கள் போவதுண்டு. பகலில் தவறினால் கூட மாலையில் அவரின் வீட்டிற்கே சென்று இஸ்திரி போட துணிகளை கொடுத்துவிட்டு வரலாம் .
அப்படி ஒருமுறை , வேலை முடிந்து மாலையில் அவரின் வீட்டிற்கு அப்பாவின் வேட்டி சட்டைகளையும் எனது சட்டைகளையும் கொடுக்க சென்றேன். அடுத்த நாள் ஏதொ விழாவிற்காக ஒரு சட்டையை மட்டும் இப்போது இஸ்திரி போட்டுத் தரும்படி கேட்டேன்.அவரும் அதை இஸ்திரி போட ஆரம்பித்தார். வெளியே என்னை நாற்காலி போட்டு அமர வைத்தார்கள். உள்ளே இரு மகள்களுக்கும் நடந்த உரையாடல் என்னைக் கேட்காமலே என் காதில் விழுந்தது.
" அப்ப இந்த எட்டு கோள் மட்டும் தான் வானத்திலே இருக்கா ? "
" நம்ம சூரியனுக்கு எட்டு கோள் தான் ,இன்னும் நிறைய சின்ன சின்ன கோள்கள் இருந்தாலும் 8 மட்டும் தான் , நம்ம சூரியன் மாதிரி இன்னும் நிறைய நட்சத்திரம் இருக்கு "
" என்னது ,சூரியன் நட்சத்திரமா ? " என்றாள் இளைய பெண். அதே சந்தேகம் தான் எனக்கும் . சூரியன் எப்படி நட்சத்திரம் ஆகும்?. "அதெப்படி , சூரியன் மஞ்சள் கலர்ல இருக்கு ,நட்சத்திரம்னா வெள்ள கலர்ல தான இருக்கும்,ஆதுவும் இது பெருசா இருக்கே ,எப்படி? " என்று தனது கேள்வியை தொடர்ந்தால் இளைய பெண் .
" அதுலாம் சொன்னா ஒனக்கு புரியாது"
" சொல்லு பரவால ,எனக்கு புரியும் "
" சரி , பனிப்பாறை தெரியுமா ? அது என்ன கலர்? "
" வெள்ள. "
" அவ்ளோ தான்.சூரியனோட கலர பனிப்பாறைங்க பிரதிபலிக்குது ,அப்ப சூரியனும் வெள்ள கலர்தான்."
" ஓ ,அப்படியா ? நல்லா இருக்கே ,அப்போ எப்படி மஞ்சள் கலர்ல இருக்கு " என்று இளைய பெண் கேட்ட வேளையில் , அவரின் மனைவி டீ எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் வீட்டு நிலைமையைப் பற்றி விசாரித்தார் . அப்பாவைப் பற்றியும் கேட்டார்.
" பையன் என்னங்க தம்பி படிக்கிறான்.பாத்து ரொம்ப நாளாச்சு " என்றார்
" நாலாவது படிக்கிறான் மா ,பக்கத்து ஸ்கூல்ல தான் சேத்தி இருக்கேன்.ஒரு நாள் கூட்டிட்டு வரேன் மா ." என்றேன் .
" பரவால தம்பி , பக்கத்துல " என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.அந்த அறிவுபூர்வமான் உரையாடலை தவரவிட்டுவிட்டேன் என் எண்ணிக்கொண்டிருக்கும் போதே மீண்டும் சத்தம் வரவே உரையாடலை கவனித்தேன்.பாதி தவறவிட்டதால் பாதியிலேயே கவனித்தேன்.
" இல்ல ,இல்ல ,அப்படி இல்ல நம்ம சூரியனுக்கும் அழிவு இருக்கு ,அழிவுனு கூட அத சொல்ல முடியாது , சூரியன் பெருசா வளர்ந்து அப்புறம் சின்னதாகிடும் ,வோயிட் டுவார்ஃப் னு பேரு அதுக்கு "
" அப்ப நம்மலாம் செத்து போயிருவோமா? "
" அப்பலாம் நாம இருக்க மாட்டோம்,அதுக்கு முன்னாடியே செத்துருவோம் " எனச் சொல்லி இருவரும் சிரித்து கொண்டனர்.
சூரியனிற்கும் அழிவு காலம் உண்டு என்பதை இந்த வீட்டில் நடந்த உரையாடலைத் தவிர வேறெங்கும் நான் கேட்டதில்லை .எப்படி சிறுபெண்ணிற்கு இவைகலெல்லாம் தெரிந்திருக்கும் என நான் வியந்தேன் . ஒருவேளை சூரியன் இறக்கும்போது நாம் இருந்தால் என்னசெய்வொம் என நினைத்துப் பார்க்கவே திகிலாக இருந்தது .பொழுது விடிந்தது என்ற சொல்லே வழக்கிழந்து போய்விடும் அல்லவா?
எனது சட்டையை தேய்த்து மடித்துக் கொடுத்தார் கண்ணன். வந்த வேலை முடிந்ததற்காக விடைபெற்றுக் கொண்டேன்.அது தான் அவரை நான் கடைசியாகப் பார்த்தது . சென்ற வாரம் அவர் நெஞ்சுவலியால் இறந்து விட்டார் . செய்தி அறிந்து அவர்கள் வீட்டிற்கு சென்று வந்தோம்.
இரண்டு வாரம் கழித்து, இப்போது நானும் என் மனைவியும் அவர் வீட்டிற்கு வந்திருக்கிறோம் .இருவருக்கும் வேலை இருந்ததால் மாலை ஐந்து மணிக்கு மேல் சென்றிருந்தோம். வீட்டில் சிறிது நேரம் கழித்து மூவரும் வந்திருந்தனர்.
" வாங்க தம்பி ,எப்ப வந்தீங்க " என்று கேட்கும்போது ,முன்பு அவரின் குரலில் இருந்த ஏதோ ஒன்று இப்போது இல்லாமல்தான் போயிருந்தது .
" இப்பதான்மா வந்தோம் , எல்லாம் எப்படி இருக்கீங்க " என்றேன் . " நல்லா இருக்கோம் பா " என்று சொல்லும் போதே துக்கம் தாங்காமல் அழ ஆரம்பித்தார். தனது மகள்களைப் பற்றி அவர் கவலைப்படுகிறார் என எங்களுக்குத் தெரியும் . ஆனால் அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவதை என இருவரும் விழித்த போதே வீதி விளக்உ அணைந்தது . வீதி விளக்கே அணைந்த பின் வீட்டு விளக்கு மட்டும் விதி விலக்கா ? மின்சாரம் இன்றி அதுவும் அணைந்தது . இன்று உண்மையாகவே அமாவாசை இரவு தான்.இந்த இருள் அந்த வீதி முழுதும் பரவி ஒரு வகை பாரத்தை சுமக்க வைத்தது .இந்த இடைவெளியில் இஸ்திரிகாரன் மனைவி தன்னால் முடிந்த வரை அழுது கொண்டார். நாங்கள் அவரை ஆசுவாசப்படுத்த முயன்றோம் .
அப்போது உள்ளே இருந்து அவரது மகள் , இராந்தல் விளக்கில் ஒளியேற்றி வந்து வீட்டின் திண்ணையில் வைத்தாள். உள்ளிருந்த மஞ்சள் ஒளி கண்ணாடி வழியே ஊடுருவி வெளியே வந்து முன்பு ஏற்றி வைத்த பாரத்தை இலேசாக்குவது போல பிரகாசித்து. சூரியனே மறைந்து போன இரவிலும் பெண்கள் தானே விளக்கேற்றுகிறார்கள் . எல்லாமுமாய் இருந்தவர் இன்று இல்லை என்றாலும் அவர்களின் வீட்டு விளக்கு எப்போதும் பிரகாசித்து எரிந்துகொண்டே தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. காரணத்தை நான் சொல்ல வேண்டியதில்லை.
மற்ற விடயங்கள் போல கல்வி என்பது சாதாரணம் அல்ல . அது மனதில் ஏற்றி வைக்கும் அணையா விளக்கு. அதுவே பெண்கள் மனதில் ஏற்றி வைத்தால் கலங்கரை விளக்கமாகி எட்டுத்திக்கும் ஒளி கொடுக்கும் . யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அது எரிந்து கொண்டுதான் இருக்கும். சிறிது நேரம் விளக்கையே வெரித்து பார்த்தபடி அமர்ந்திருந்தேன் .
பின்பு நேரமானதை உணர்ந்து " அப்புறம் கெளம்பறோம் மா ,நேரமாச்சு அப்பா உங்கள பாக்கணும்னு சொன்னாரு , நாளைக்கு கூட்டிட்டு வரேன் " என்றேன் . கண்ணைத் துடைத்துக் கொண்டே" சரிங்க தம்பி ,வாங்க " என்று கூறினார் .
நாங்கள் இருவரும் வீதியில் நடந்தோம் . நாங்கள் தெருமுனைக்கு செல்லும் வரை அவ்வொளியே போதுமானதாக இருந்தது.