தமிழ்ச் சங்கம் பற்றி கூறும் கவிதை
கொங்கு தேர் வாழ்க்கை என்னும்
கணக்கிட்டுக் கண்டறியா
கடலாடிய முத்தை அமுதம்போல்
இவளுக்குப் பரிசாய் கொடுத்த
கூந்தலின் காவிய பாடலைப் பாடி ,
நக்கீரன் என்பவன் குற்றம் கடியத்
தான் யார் என்று சிவனவன்
நுதலின் வழியே
நுவலும் விழி திறந்த
சங்கம் இது !
கடலில் மிதக்கும்
கதிரவன் ஒளியும்
காலத்தவளை , எடுத்து வளர்க்க
கடைந்தெடுத்த பாண்டியர்கள்
காலத்தை விழுங்க அமைத்த அவை இது !
இருள் வந்து சூழ்ந்து என் இனியவளை
ஏசுவதற்கு முன் , களப்பிர கள்வர்கள்
நூற்றாண்டு மௌனங்கள்
இவளை நசுக்குவதற்கு
முன் கொண்டாடிய
சங்கம் இது !
காற்றில்
கலந்த ஈரங்கள்
இவளின் கவிகளைக் கேட்டால்
குளிர் காயும் !இந்த கடைக்கோடி ஈரங்கள் ,
கடலலையாய் பெருக்கெடுக்க
அடைக்கலமானது இந்தச் சங்கம் !
இலையில் பாயும் நரம்புகளும் ,
இவளின் எழுத்தைச் சித்தரிக்கும் !
இதழில் இழைந்த வண்ணங்கள்
யாவும் இவளின்
இளமை காட்டும் !
காட்டாற்று வெள்ளம் போல்
அணையை உடைக்கவே ,
இவளை அரவணைத்து
வளர்த்தது சங்கம் !
தமிழை மட்டும் வளர்க்காமல்
தமிழர் வாழ்வையும் வளர்த்தது சங்கம் !