இரவில் மேற்கொள்ளும் பயணத்தை வாழ்வின் பயணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் கவிதை
வழிகாட்டியும் நீதான் ,எனக்கு
வழித்துணையும் நீதான் ,
விளக்கொளியே ! அணைந்து விடாதே!
இந்த ஒற்றையடிப் பாதை
குழப்பம் தரக்கூடியதாம்,
ஏற்றங்கள் சட்டென சரியக் கூடியதாம் !
விளக்கொளியே ! அணைந்து விடாதே!
பாதங்களைப் பதம்பார்க்கும்
முட்கள் ஏராளம்,
விளக்கொளியே! அணைந்து விடாதே!
பின்னோக்கிப் பார்ப்பதில்
பயனில்லை என்றார்கள்,
முன்னோக்கிப் பயணிக்க
விளக்கொளியே ! அணைந்து விடாதே!
புலியும் தோல் போர்த்தி பூனையாய் வருமாம்,
நரியும் உடைமாற்றி நாய்போல வருமாம்,
விளக்கொளியே ! அணைந்து விடாதே!
சிறு பள்ளமும் கிணற்றின் ஆழமாம்,
கதிரவன் கதிர்களை இந்தக்
காரிருள் தின்றுவிடுமாம்,
விளக்கொளியே! அணைந்து விடாதே!
கடுகு சிறுத்த கற்களும்
நம்மை தடுமாற்றி தடமாற்றுமாம்,
விளக்கொளியே ! அணைந்து விடாதே!
ஒளியைத் தொலைத்த பலருக்கு
நீயும் வழிகாட்டலாம் ,
பலரின் விளக்கொளி நம் பாதை மறைக்குமாம்,
விளக்கொளியே! அணைந்து விடாதே!
கடைக்கோடியில் வரவிருக்கும்
கலங்கரை விளக்குவரை ,
விளக்கொளியே ! அணைந்து விடாதே!