ஒரு வகை ஆசைகளுக்கும் மகிழ்ச்சிக்கும் அப்பாற்பட்ட மனநிலையுடைய பெண் பற்றிய கவிதை
அவளை அவளே கண்ணாடியில்
பிம்பமாய் ஒருமுறை கண்டுகொண்டாள்.
காலம் அவளின் வாழ்க்கைக் கோலத்தைக்
கலையாமல் வரைந்திருந்தாலும்,
வண்ணங்களை ஏனோ
வரைய மறந்தது.
அவளுக்கு இன்பத்தில் சிரிப்பில்லை,
துன்பத்தில் அழுகை இல்லை,
வெற்றிகளில் திருப்தியில்லை,
ஒரு மழலையின் சிரிப்பும் கூட
அவளுக்கு நிம்மதி கொடுக்கவில்லை,
பட்டினத்தாரைப் படித்ததாலோ என்னவோ
செத்தாரைப் போலத் திரிகிறாள்!
நிரந்தரமில்லா உலகத்தில் நின்றிடும்
யதார்த்தம் அவள் !!