எட்டுத்தொகை நூல்களுக்கு உரை எழுதியவர்களுள் ஒருவரான புலியூர்க் கேசிகரின் உரை நயம் பற்றி கூறும் கட்டுரை
அவர்களுள் இருபதாம் நூற்றாண்டின் பன்முகத் திறமையாளர், எழுத்தாளர் புலியூர்க் கேசிகன் அவர்களும் ஒருவர். அனைவரும் பயன் பெரும் வகையில் அனைத்து சங்க இலக்கியங்களுக்கும் உரை வழங்கி வெளியிட்டவர் கேசிகனார். இதுமட்டுமல்லாமல் பல்வகை நீதி நூல்களுக்கும், காப்பியங்களும், சிற்றிலக்கியங்களுக்கும் உரைவழங்கியுள்ளார். இவர் சில சங்க இலக்கியங்களுக்கு உரை வழங்கும் திறத்தை, நயங்களை இந்தக் கட்டுரையில் காணவிருகிறோம்.
புலியூர் கேசிகன்
இருபதாம்
நூற்றாண்டின் ஆகச்சிறந்த உரையாசிரியர்களுள் ஒருவர் புலியூர்க் கேசிகன். இவர்
நெல்லையைச் சேர்ந்த புலியூர்க் குறிச்சியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் க. சொக்கலிங்கன். இவரை பெற்றேடுத்த பெரியோர்கள்
கந்தசாமி பிள்ளை - மஹாலட்சுமி அம்மையார். இவர் நெல்லையிலுள்ள இந்துக் கல்லூரியில்
ஆங்கிலப் பிரிவில் படித்தார். எனினும் தமிழார்வம் இவரை அனைத்து சங்க
இலக்கியத்திற்கும் எளிய உரை எழுதி, மலிவு பதிப்பில்
விற்றுத் தொண்டு புரியவைத்து. இவர் மனோசக்தி, எண்களின் இரகசியம், எண்களும் எதிர் காலமும், தியானம் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
நந்தி வாக்கு, சோதிட நண்பன் போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். இவர்
ஒரு சிறந்த கவிஞர், படித்திருத்துநர்,
பதிப்பாசிரியர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்,
சோதிடர், எண் கணித
வல்லுநர், ஆவிகள் பற்றிய
ஆராய்ச்சியாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவரின் படைப்புகள் குமுதம், குங்குமம், தாய், இதயம், விகடன், ஞானபூமி, முத்தாரம், அமுத சுரபி, கல்கண்டு போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
உரை வழங்கும் முறைகள்
தமிழில் பழங்காலத்தில் தோன்றி இன்றும் எண்ணற்ற இலக்கிய இலக்கணங்கள் வழக்கிருந்து
வருகிறது. அவை முற்காலத்தில் சுவடியில் எழுதப்பட்டு அதற்கான விளக்கங்கள் ஆசிரியர்
கூற மாணவன் கேட்டு பயன்பெறும் செவிவழி உரை விளக்கங்களாகவே இருந்தன. பின்பு அந்த
மாணவன் ஆசிரியனாகி தனது மாணவர்களுக்கு சொல்லிக்
கொடுப்பான். 'காலங்கள் செல்லச்
செல்லக் கருத்துகள் வளர்ந்தன. குறிப்புரையுடன் முன்னோர் சொல்லி வந்த விளக்கம், மேற்கோள் ஆகியவை விரிவடைந்தன. அவற்றையும் ஏட்டில் எழுதும்
நோக்கம் ஏற்பட்டது '
முதலில் பதவுரையாக இருந்து பின்பு விளக்கவுரை,இலக்கணமாயின் உதாரணங்களோடு கூறுதல் என உரைக்கள் பல கிளைகளாக
வளர்ந்துகொண்டே போனது. இன்று அவசர காலத்தில் எல்லாவற்றையும் எளியதாய் கேட்கும்
தலைமுறைகளால் அனைத்து விடயங்களும் எளியதாய் ஆகும் போது உரைகளுக்கு மட்டும் விதிவிலக்கில்லை
.
உரைகளை எளிய
தெளிவுரைகளோடு தனி விளக்கங்களையும் தந்து சொற்பொருள்கள், சங்க இலக்கியங்களுக்கு பாடியவன், பாடப்பட்டோன், திணை, துறை, பாடலின் சிறப்பு, பாடலின் சூழல், இறைச்சி, உள்ளுறை உவமம் என
அனைத்தையும் தொகுத்து கூறும் இயல்புடையது புலியூர்க் கேசிகனாரின் உரைகள். அதில் பொருள்கோள்களின் இலக்கணங்கள் அறிந்து உரை
வழங்கியுள்ளார் என்று கூறலாம். இலக்கிய நயம் கொண்ட உரையாகவும் இவரின் உரை
காணப்படுகிறது.
நற்றிணையில் உரை நயம்
நற்றிணையில் இரண்டாம் தொகுதியில் உரை எழுதும் போது
கேசிகனார் தெளிவுரையில் பாடலின் விளக்கமும், விளக்கத்தில் அதன் உள்ளார்ந்த அரத்தங்கள் பலவற்றையும்
கூறுவதைக் கண்டால் அது சற்றே திறனாயும் கோட்பாட்டை ஒத்திருக்கிறது.
உரையாசிரியர்கள் மதிப்பீடு முறையில் அதாவது திறனாய்வு முறையில் மேம்பட்டவர்கள்
என்பர். கற்போரை மென்மேலும் கற்க தூண்டுவர்
தெய்வம் காக்கும் தீதுநீர் நெடுங்கோட்டு
அவ்வெள் ளருவிக் குடவரை யகத்து" ( நல் - 201)
என்ற பாடல் வரிகள் தலைவி "நெடுங்கோட்டு வெள் அருவியை ஒத்தவள்" என்று பாடல் கூற
அதற்கு விளக்கமாக அந்த அருவியின் சிறப்பு, கண்டாரை தன் பெருங்கவினால் தன்பால் ஈர்க்கும் வனப்பு
கொண்டது அத்துணை வனப்பு மிக்க அழகியவள் தலைவி என்று உரை கூறுவது நயமிக்கதாய்
உள்ளது .
மேலும்
தலைவி தனது தோள்வளைகள் நெகிழ்தலால் வரும் ஓசையும் இடி முழக்கமும் கேட்டும் இன்னும்
தலைவர் வரவில்லை, அவர் அவ்வோசைகளை
கேட்டிருக்க மாட்டாரோ? என்று கூறுவது அவளின் ஆற்றாமை
என்கிறார் உரையாசிரியர் .
"கெல்லர் கொல்லோ தோழி தோள
இலங்குவளை
நெகிழ்ந்த கலங்கமும் எள்ளி
நகுவது போல் மின்னி
ஆர்ப்பது போலுமிக் கார்ப்பெயல் குரலே" ( நல் – 214)
'கண்ணும் தோலும்' எனத் தொடங்கும் பாடலில் தலைவன் நீண்ட காலம் பொருள் காரணமாக
பிரிந்தாலும் அவன் பொருள்கள் தேடி வரும்
வரை ஆற்றியிருப்பது தலைவியின் கோட்பாடாகவும் அதுவே பண்டைய தமிழ் மகளிரின்
மரபு எனவும் சுட்டிக்காட்டுகிறார் புலியூர் கேசிகனார்.
ஐங்குறுநூறின் உரை நயம்
ஐங்குறுநூற்றிற்கே
உரிய சிறப்பான உள்ளுறை உவமம், இறைச்சி
போன்றவற்றை வகுத்து பொருள் கூறி நமக்குத் தெரிவு செய்கிறார் உரையாசிரியர் கேசிகனார். இதில் கவிதைகள் குறைந்த அடிகளை உடையன, ஆதலால் கவிஞரின் கருத்துகள், கவிதைகளின் உள்ளே மறைந்து வாழுகின்றன என்று
சுட்டப்படுகின்றது
" பூத்த கரும்பிர்
காய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன மாகற்க எனவேட் டோமே "
( ஐங்குறு - 4 )
என்ற வரிகளில் இவர் உள்ளுறையாக கூறுவது பூத்து பயன்படாது
ஒழியும் கரும்பையும், காய்த்துப்
பயன்தரும் நெல்லையும் ஒருசேரச் சுட்டுவதன் காரணம் குடிநலம்
காக்கும் தலைவியும், பொருளே கருதும் பரத்தை
ஆகிய இருவரையும் ஒரு சேர கருதி இன்பங்
காணும் மனம் உடையவன் தலைவன் என்று பழிப்பதற்காய் வைக்கப்பட்ட உவமை என்று
கூறுகிறார் உரையாசிரியர் .
பின்பு
வாயில் வேண்டி கூறிய பாங்கனுக்குத் தன் இசைவினை தலைவி புலப்படுத்தவும் தன் நிலைமையை எடுத்துக்
கூற அமைந்த செய்யுளாக இருக்கும் சில
வரிகளில்,
" நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தடமென் தோளே "
( ஐங்குறு - 11)
அவன் எனக்கு செய்து வரும் கொடுமையை மறைப்பினும் என் தோள்கள்
தம் மெலிவாலே பிறர் அறிய பழித்துப் பேச காட்டிவிடும்
என்று கூறுவதாக உரையாசிரியர் கூறும் நயம் பாராட்டத்தக்கது .
பதிற்றுப்பத்துவின் உரை நயம்
ஆதியும் அந்தமும் இல்லாத எட்டுத்தொகை நூலாக
விளங்குவது பதிற்றுப்பத்து. தமிழகத்தில் ஆட்சி செலுத்திய முடிவேந்தர் மூவர்களுள்
ஓருவரைப் பற்றிய வரலாற்று நூல் என கூறப்படுகிறது
"வளைதலை மூதா ஆம்பல் ஆர்கவும் "
( ப . பத்து - 13 )
இருக்கும் வரிகளான
இவற்றிற்கு ஆம்பல் சூடிக்
களித்தாடும் இளமகளிரைக் கொண்ட
ஊர்களைக் குறிப்பதாக கூறியுள்ளது உற்றுணரத்தக்கது. மேலும் இதே பாடலில் 'நோயோடு
பசியிகந்து' என்பதுதான் ஒரு
நல்லாட்சியின் குறிக்கோள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் கேசிகனார் .
கடவுளே சிறப்பை வியந்து சேரனுக்கு
வரந்தரலே விரும்பி வந்து அவன் மாளிகையை அடைந்ததாக 'கடவுளும் விழைதக' என்ற வரிகளுக்கு உரை வழங்குகிறார். தீயில் நெய்யும், ஊனும், சொரிந்து
இயற்றும் வேள்விப் புகையும் சட்டியில் ஊனும் நெய்யும்
சொரிந்து தாளிக்கும் புகையும் ஒரே மணத்தை இரண்டின் கலந்த
நாற்றத்தையும் விரும்பி உண்ணும் கடவுளரே" நாற்ற உணவினர்" என்ற இவரது
உரைநயம் சிறந்த முறையில் அமர்ந்துள்ளது என்றே கூறலாம்.
பரிபாடலில் உரை நயம்
சங்க இலக்கியத்தின் ஒரே அகப்புற நூலாக விளங்குவது பரிபாடல். பதின்மூன்று புலவர்கள் பாடிய இருபத்திரண்டு பாடல்கள்
கிடைத்துள்ளன. இதன் முதற் பாடலான
திருமால் வாழ்த்து பாடலிலேயே தனது உரை
நுணுக்கத்தை காட்டுகிறார் கேசிகனார்.
உதாரணமாக, திருமால் வாழ்த்து
பலராமனை திருமாலாகக் கொண்டு பாடியதன் காரணம் ஆசிரியர் வெண்மைக்கு முதன்மை
தந்திருக்கிறார் என்கிறார் உரையாசிரியர்.
மேலும் மூன்றாவது திருமால் வாழ்த்தில்,
" ஞாலத்து உறையுந் தேவரும் வானத்து " ( பரி - 3 )
என்ற வரிகளுக்கு ஞாலத்து உறையும் தேவர்களாக, மனிதராகப் பிறந்து தெய்வமாக உயர்ந்த சித்தர், முனிவர், சான்றோர், பக்தர், கற்புடைமைகளிர்
என மேலான விளக்கத்தை தந்துள்ளார் உரையாசிரியர்.
" மறுபிறப்பு
இல்லெனும் மடவார் சேரார் " ( பரி - 5 )
என்ற செவ்வேள் பாடல் வரிகளின் விளக்கமாக மறுபிறப்பு இல்லை
என்று சொல்பவர்கள் நல்வினை, தீவினை ஆகிய
இரண்டின் கூறுபாடுகளை அறிய மாட்டார்கள். எனவே அறநெறியில் நில்லாதவர்கள்
அரும்பொருளைக் கருதத்தவர்கள். அத்தகையவர்கள்
உன்னை சேர மாட்டார்கள் என்று ஒரு தத்துவ
பொருள் கூறுகிறார் உரையாசிரியர் கேசிகனார்.
கலித்தொகையில் உரை நயம்
கற்றறிந்தார் ஏத்தும் நூலாக விளங்குவது கலித்தொகை. சங்க
இலக்கியத்தில் கலிப்பவால் அமைந்து, பாவகையால் பெயர்
பெற்ற நூலாகும். கலிப்பாடல்கள் வைத்து கதையே புனைந்து விடலாம் என்பர்
"ஆனாது இவள்போல்
அருள் வந்தவை காட்டி " ( பா.கலி-2 )
என்ற பாலைக்கலியின் பாடல் வரிகளுக்கு தனி விளக்கம்
தந்துள்ளார் உரையாசிரியர். இந்த முழு பாடலில் கூறியிருக்கும் 'நீர் வற்றிய சுனையும், தாழையோடு வாடிய மலரும், தளர்ந்து வீழ்ந்து கிடக்கும் கொடியும், மரத்தின் கண் வாடிய தளிரும் ஆகிய இவையேனும் உனக்கு இவளது
வாடிய நிலை காட்டி விடும், வீடு திரும்புக! என தோழி உரைக்கிறாள் என்று நயமான நுணுக்கமான உரையை வழங்குகிறார் கேசிகனார்
.
பாலைக்கலியின் பதினேழாம் பாடல்
வரிகளுக்கு பெண்மையின் உண்மைத்தன்மையை கூறும் உரையை கொடுத்துள்ளார் உரையாசிரியர்.
அந்த வரிகளாவது ,
" ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே
வாழ்க்கை ... " ( பா. கலி - 17 )
என்பதற்கு பெண்மை என்பது ஒரு துண்டு ஆடையையே உடுத்தும்
வறுமை வரினும், எப்பொருளினும்
எந்த இன்பத்திலும் தன் காதலனுடன் கூடிப்பெறும்
காதலின்பம் ஒன்றையே சிறப்பாக கருதி வாழ்பவரின் வாழ்க்கையே வாழ்க்கை என்று கருதும்
மனம் கொண்டதாய் கூறியுள்ள இடம் மிக நயமிக்கதாய் உள்ளது.
அகநானூறின் உரை நயம்
அகம் என்று பெயர் அமைந்த பழைய இலக்கிய நூல் இது ஒன்றே என்பர்
" நம்புரி அறியா நலமோடு சிறந்த
நல்தோள் நெகிழ வருந்தினள் கொல்லோ " ( அகம் - 41 )
என்ற வரிகளுக்கு கார்காலம் தொடங்கிற்று. அதற்குள் வீடு திரும்ப வேண்டியவன்,திரும்ப இயலாமையால் , அவளை நினைத்து 'நல்ல தோள்கள், நாம் பிரிந்துவிட்ட தன்மையினால் அவ்வழகு கெட மிகவும் மெலிந்து நெகிழ்த்திடலால்,அவள் மிகவும் வருந்தியவளாக இருப்பாளோ?' என்று கூறினான் என்று உரை வழங்குகிறார் ஆசிரியர்.
இதுமட்டுமல்லாமல், தோழி தலைமகளை தலைவன் மணம் செய்யச் சொல்லும் பாடலில்,
"நெடுந்திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு
உப்பநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
ஆயிலை துழந்த அம்புளிச் சொரிந்து ,
கொழுமின் தடியோடு குறுமகள் கொடுக்கும் " (அகம் - 60 )
என்ற வரிகளுக்கு கேசிகனார்' தந்தை மீன் பிடித்து கொணரும் முன்பே, தந்தைக்கு உப்புவிற்ற பொருளால் சோறும் கறியும் ஆக்கிக் கொணர்பவர் எம் மகளிர். அதுபோல், நீவிர் வரைந்து வந்து கொள்வதற்கு முன்பே யாமும் அறத்தொடு நின்று முயல்வோம்' என்று உட்பொருளாக கூறுவது அகப்பாடல்களை அகமகிழ சுவைக்க வைக்கும் திறம் கொண்டனவாக உள்ளது.
புறநானூறில் உரை நயம்
புறம் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டது. இதில்
அறத்தைப் பற்றிய கருத்துக்களைக் கூறுதற்கு ஏற்ற புறப்பொருள் அமைந்தது ஆதலால், வாழ்க்கை தத்துவங்கள் ஒளிரும் நூலாக இதனைக் கூறுவார்
" உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்க கேட்ட
மாறுகொல் " ( புறம் - 50 )
என அடிகளுக்கு உரையாசிரியர் கேசிகனார் சீர் மாறாமல்
இருந்தபடியே தெளிவான விளக்கத்தைத் தருகிறார்.
அதாவது 'இங்கே புகழ்
உடையவர்களுக்கு அல்லாது பிறருக்கு உயர்நிலை உலகத்து வாழ்வு கிடையாது' என்று பொருள் கூறி முடிக்கிறார்.
" அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்
எந்தையும் உடையோம் எம்குன்றும் பிறர்கொளார்" ( புறம் - 112 )
என்ற புகழ் பெற்ற பாரி மகளிரின் பாடலில், இவ்வரிகளுக்கு 'அந்த மாதத்தில் இந்த வெண்ணிலவு இப்படியே எரிக்கும் வேளையில்
எம் தந்தையை உடையவராக இருந்தோம். எம் குன்றினையும் பிறர் கொள்ளவில்லை' என்ற உரையில் குளிர்ச்சியான நிலவை எரிக்கும்
வெண்ணிலவு என்று கூறி பாரி மகளிரின் துயரில் நாமும் பங்குகொள்ள ஏதுவான வார்த்தையை
அமைத்துள்ள இதை உன்னத உரையாகவே
பார்க்கலாம் .
மேலும், இயைபு நயங்களைக் கொண்ட உரையாகவும் இவரின் உரைகள்
விளங்குவதைக் காணலாம். சான்றாக ,
" உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முறைசுகெழு செல்வர் நகர்போ லாதே " ( புறம் - 127 )
என்ற வரிகளுக்கு'
புகழற்ற முரசு விளங்கும் அருளற்ற
அரசர்கள்' என்று கூறுவதன்
மூலம் இலக்கிய நயம்படவும் உரையாசிரியர்
கேசிகனார் விளக்கவுரை எழுதியுள்ளது பாராட்டத்தக்கது .
முடிவுரை
உரையாசிரியர்கள் அனைவரும் சிறந்த இலக்கியவாதிகள் என்று
புலியூர்க் கேசிகன் உரைகள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். உரையாசிரியர் கேசிகனார்
தந்த உரைகளின் மூலம் சிறந்த இலக்கிய நயன்களையும், பிற உரைகள் கூறாத நுணுக்க கருத்துகளையும் மற்றும் இதர
செய்திகளையும் இந்த கட்டுரை வழி விளக்கமாகக்
கண்டோம். நூல்களில் சிறந்த நூல்களே காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றது. அதுபோல உரைகளுள் காலம்
கடந்தாலும் நிற்கப்போகும் உரை கேசிகனார் உரையே. இவ்வுரைகளில்
தெளிவுரையோடு தனியாக பாடலில் ஆசிரியர் கூறவிழைந்ததாக கொள்ளப்படும் பல கருத்துகளை தனி
விளக்கமாகவும், கருத்து என்ற
தலைப்பிலும் இவர் கொடுத்தமை மிகவும் பாராட்டத்தக்கது. புராண கதைகளையும் பாடல்
விளக்கங்களோடு புரியும் வண்ணம் தந்துள்ளார் கேசிகனார. அப்படி இருக்கும் உரைகளில்
மிகச்சில உரை நயத்தை இங்குத் தொகுக்க முடிந்தது. தோண்ட தோண்ட ஊரும் கிணறு போல
இவ்வகை உரைகள் நம் அறிவை பெருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்ல.
மேற்கோள்கள்
1. அரவிந்தன், ம. .. (2020). உரையாசிரியர்கள் . சென்னை : மணிவாசகர் பதிப்பகம் .
2.
கேசிகன், ப. (1998). ஐங்குறு நூறு, மருதமும்
நெய்தலும். சென்னை : பாரி
நிலையம்.
3.
கேசிகன், ப. (2001). நற்றிணை, இரண்டாம் பகுதி . சென்னை : பாரி நிலையம் .
4.
கேசிகன், ப. (2009). பதிற்றுப்பத்து மூலமும் உரையும் . சென்னை : சாரதா
பதிப்பகம் .
5.
கேசிகன், ப. (2009). பரிபாடல் மூலமும் உரையும் . சென்னை : சாரதா பதிப்பகம்.
6.
கேசிகன், ப. (2010). அகநானூறு, களிற்றியானை நிரை மூலமும் உரையும் . சென்னை : சாரதா பதிப்பகம் .
7.
கேசிகன், ப. (2010). பாலைக் கலி மூலமும் உரையும் . சென்னை: சாரதா பதிப்பகம் .
8.
கேசிகன், ப. (2010). புறநானூறு மூலமும் உரையும். சென்னை: சாரதா பதிப்பகம்.
9.
சோம.இளவரசு. (1998). இலக்கிய வரலாறு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
10.
பாலசுப்புரமணியன், ச. (1998). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை : மனமலர்ப் பதிப்பகம் .
11.
விமலானந்தம், ம. .. (2018). தமிழ் இலக்கிய வரலாறு . சென்னை : முல்லை நிலையம் .