சிலப்பதிகாரத்தில் காணலாகும் புறத்திணைக் கூறுகள்

சிலப்பதிகாரத்தில் இருக்கும் புறத்திணை கூறுகள் பற்றிய கட்டுரை



அறிமுகம் 
       சிலப்பதிகாரம் என்பது  காப்பிய நூலாகும் தமிழ்த்தாய் முதன்முதலாகத் தன் தாளில்  அணிந்துகொண்ட அணிகலன் இந்தச் சிலம்பே! தமிழ் காப்பியங்களில் முதற்காப்பியமாகவும், முத்தமிழ் காப்பியமாகவும், விளங்குவது சிலப்பதிகாரமாம். சிலம்பு + அதிகாரம் எனப் பிரித்து கண்ணகியின் சிலம்பை வைத்து எழுதப்பட்ட  காப்பியம் என நாம் தெளிந்து கொள்ளலாம்.சீத்தலைத் சாத்தனார் செல்ல, இளங்கோவடிகள் இக்காப்பியத்தை இயற்றினார் என்பதை" அடிகள் நீரே அருளுக" என்னும் பதிக அடிவழி உணரலாம். முதன்முதலாகச் சாதாரணக் குடிமக்களைக் காப்பியத் தலைவன், தலைவியாகக் கொண்ட நூலாகும். 
            
                       இவ்வகைச் சிலப்பதிகார பாட்டுடைச் செய்யுள்களில் ஆங்காங்கே சில புறச் செய்திகளும் துறைகளும் சிதறி இருக்கக் காண்கிறோம். வாழ்க்கையின் இலக்கணமான சிலம்பில் கூறப்பட்டிருக்கும் புறத்துறைகளைப் பற்றியும் அதன் கருத்துக்களைப் பற்றியும் இக்கட்டுரை அமைந்துள்ளது.
    
புறப்பொருள்
      
                   புறம் என்பது புறச்செய்திகளைக் கூறும் இலக்கணமாகும். மன்னர்களின் வீரம் கொடை, போர்த்திறம்,மக்களின் நாகரிகங்கள், நாட்டு வளங்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் முதலிய பல செய்திகளை உள்ளடக்கியதாகும். ஏறத்தாழ அகச் செய்திகளான அன்பைத் தவிர்த்த அனைத்தும் இந்தப் புறப்பொருளில் அடங்கும்.


 வெட்சித்திணை

                      வேந்தனால் ஏவிவிடப்படும் மறவர்கள், வேற்று நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஆநிரைகளைக் களவினால் கவர்ந்து வருவர். வேந்தனால் அன்றி வேந்தனின் குறிப்பறிந்து மறவர்கள் தன்னிச்சையாகவும் செயல்பட்டு ஆநிரைகளைக் கவர விரைவர். அவற்றின் உரிமையாளர்கள் மீட்டுச் செல்லாதபடி பாதுகாப்பது வெட்சித் திணை என்று தொல்காப்பியம் கூறும்.

              "வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்               களவின் 
              ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும் "      
                                                                                            தொல்.பொ.60

                 வெட்சி மறவர்கள் சிவந்த குறிஞ்சி நில மலரான வெட்சிப்பூவைச் சூடி பகை நாட்டு ஆநிரைகளைக் கவர்ந்து வரும் ஒழுக்கம் வெட்சித்திணை என வெண்பாமாலை கூறுவதை அறியலாம். 

                       சிலப்பதிகார மதுரை காண்டத்தில், வேட்டுவ வரிக் காதையில், சீறூரில் உள்ள மறவன், ஆநிரை கவர கொற்றவையை வழிபட்டுச் செல்லும் போது வெட்சி சூடுவதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது .
      
              "நிரைகொள்ள உற்ற காலை 
               வெட்சி மலர் புனைய "         சிலம்பு .

பாதீடு    
         ஆநிரைகளைத் தகுதிக்கேற்ப மறவர்கள் பங்கிடுக் கொள்ளுதல் பாதீடு என்பது தொல்காப்பிய விளக்கமாகும்.

     இதனையே, புறப்பொருள் வெண்பாமாலை ,

           "ஈண்டியநிரை ஒழிவின்றி
            வேண்டியோர்க்கு விரும்பிவீசின்று " 

எனக் கூறுகிறது.
     
                       இங்குச் சிலம்பிலும் மறவன்  ஆநிரை கவர்ந்த பின் கொல்லன், துடியன், யாழிசைவல்ல பாணன்,  கள் விற்பவர்கள், கானவன்,  புள்நிமித்தம் சொன்ன கணிவன்எயினர்எயிற்றியர்களுக்கு பகிர்ந்து கொடுத்ததாக

             "கொல்லன் ,துடியன் கொலைபுணர் சீர்வல்ல 
              நல்லியாழ் பாணர்        ...   ...   ...
               .....          ......           .......       ......      ......
              கள்விலை யாட்டி நல் வேய்தெரி கானவன்
               .......       ......      ......       ......
               எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன ! "
 
 என்னும் செய்யுள்களின் வழிக் காணலாம். 
 

அவிப்பலி

                சூளுரைத்தபின் வெற்றி பெற்ற மறவன், அரசனுக்காக தம் உயிரைப் பலிகொடுத்தல் அவிப்பலி எனும் வாகைத் துறையாகும். இதனை,

 
             "வெள்வாள் அமருள் செஞ்சேறு அல்லது 
              உள்ளா மைந்தர் உயிர்பலி கொடுத்தன்று "

  சிலம்பில் ,
             "மிடறுஉகு குருதி ; கொள் விறல்தரு விலையே !
              நிணன்உகு குருதி ; கொள் நிகர் அடுவிலையே! " 

என்ற செய்யுள்வழி, அறுபட்ட மிடற்றிலே இருந்து பொங்கும் குருதியைக் கொள்வாய்! வெற்றிக்கு நான் தரும் விலை இது! என இங்கு அரசனுக்கு மாறாக கொற்றவையைக் குறிப்பிட்டுப் பாடுகிறான் மறவன்.
 
             "குமரிநின்  அடிதொடு 
              படுகடன் இது ; உகு பல .." 

   என்பதன் மூலம் கொற்றவையின் பாதங்களைத் தொட்டுச் சூளுரைத்து பட்டகடன் அறுபடக் கழுத்தின் உதிரத்தை ஏற்குமாறு வரும் பாடல் தொல்காப்பியத் துறைகளோடு ஒன்றிவருவதைக் காணலாம் .

காஞ்சித் திணை

               போரில் வெல்லத் தவறினால் இன்ன இழிநிலையை அடைவேன் என அரசன் சூளுரைப்பது வஞ்சினக் காஞ்சி  என்கிறது தொல்காப்பியம். இதனை வெண்பாமாலையும்,

            "வெஞ்சின  வேந்தன் வேற்றவர்ப் பணிப்ப 
             வஞ்சின கூறிய வகைமொழிந் தன்று "

என ஓர் அரசன் மாற்றரசனை காலடியில் பணிய வைப்பேன் எனச் சூளுரைப்பது வஞ்சினக் காஞ்சி என்று கூறுகிறது.

           சிலம்பிலும் அவ்வாறே, " இமயப் பெருமலை நாட்டு மன்னன், கண்ணகி என்னும் பெரும் பத்தினிக்குக் கடவுள் எழுத (சிலை வடிக்க) ஒரு கல்லினை தராவிட்டால்,

             "கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும் " 

எனத் தொடங்கி, பெருங்காஞ்சியும், மகட்பாற் காஞ்சியும்,முதுகாஞ்சியும் மணிமுடியில் கதிர் படிந்த மந்தாரத்துடன் வேங்கையைத் தொடுத்த மாலையைக் கட்டுவேன்" எனப் பாண்டியன் செங்குட்டுவன் சூளுரைப்பதைக் காணலாம்.

வஞ்சித்திணை

                தொல்காப்பியம் வஞ்சித் துறைகளுள் மாராயம் பெற்ற நெடுமொழி, ஒருவன் தாங்கிய பெருமை, பெருஞ்சோற்று நிலை, கொற்ற வள்ளை ஆகிய சில துறைகளைச் சிலம்பில் வரைவதைக் காணலாம். புறப்பொருள் வெண்பாமாலையிலும் குடைநிலை, கொற்ற வஞ்சி, மாராய வஞ்சி, பெருவஞ்சி, பெருஞ்சோற்று நிலை, கொற்ற வள்ளலை ஆகிய துறைகளையும் இதனுள் பார்க்கலாம்.
 
                    சிலம்பில் சேரன்,பனம்பூ மாலையை சூடிவஞ்சி நகர் புறத்தே பகைவரை வெல்ல, வாளிற்கு வஞ்சி மாலை சூட்டுவோம் எனக் கூறுவதைக் காணலாம்.

                 "குடைநிலை வஞ்சி      .......
                  வாய்வாள் மலைந்த வஞ்சி சூடுதும் " 

          பிறகு கூரிய அவ்வாளினை ஏந்தி. செங்குட்டுவன் மலர்ந்த வஞ்சியைத் தன் திருமுடியில் சூட்டி, வடதிசை படையெடுப்பிற்காக போர்கோலங் கொண்டதாக,


               "பூவா  வஞ்சியிற் பூத்த வஞ்சி
                வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக்கு அணிந்து "
 
 என்னும் காலக்கோட் காதை வரிகள் கூறுகின்றன.

தும்பைத் திணை 

                  தும்பை  என்பது,வலிமையை உலகோருக்கு உணர்த்த வரும் ஓர் அரசனை மாற்றரசன் எதிர்த்து வெல்வது எனத் தொல்காப்பியம் கூறுகிறது. வெண்பாமாலையிலும் 

             " செங்களத்து மறம்கருதிப் 
               பைந்தும்பை தலைமலைந்தன்று "

என கொளு வழி, மாற்றரசனோடு போர் செய்யக் கருதிய அரசன் தும்பைப் பூவைச் சூடுதலே தும்பை எனக் கூறுகிறது.

               சிலம்பிலும், காலக்கோட் காதையில் பனம்பூ மாலையோடு, தும்பை மாலையினையும் தன் திருமுடி மேலாக அணிந்தான் என,

               "போந்தையோடு தொடுத்த பருவத் தும்பை " 
என்னும் வரியில் புறத்துறையைக் காணலாம் .

வள்ளைப் பாட்டு 

                மன்னனில் வெற்றியைப் பாடுவது வள்ளைப் பாட்டு எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. இது ஒருவகை உலக்கைப் பாட்டாகும். 
      
               "மன்னவர் புகழ்கிளந்து 
                ஒன்னார்நாடு  அழிபு இரங்கள் "

என்று வெண்பாமாலை கூறியது.இதனைச் சிலம்பும் வாழ்த்துக் காதையில் பாடியிருப்பதைக் காணலாம். அதாவது நல்ல இனிமையான சுவையுடைய கரும்பை உலக்கையாகவும், செழுமையான முத்துக்களை நெல்லாகக் குற்றுவர் புகார் மகளிர்.
        அந்தப் புகார் நகரை ஆளும் மன்னன் அழகிய திண்ணியத் தோளை உடையவன். அவனை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலே சிறந்த பாடல் என்று இளங்கோவடிகளார் பாடுகிறார். அதன் வரிகளாவது,

            "பாழித் தடவரைத் தோள் பாடலே பாடல் 
             பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல் ! " 


முடிவுரை 
              பெருங்காப்பியத்தில் தலைக் காப்பியமாம் சிலப்பதிகாரத்தில், புறத்திணைகள் பற்றிய கருத்துகள் குவிந்திருப்பதை இங்கு நாம் கண்டோம். இவையாவும் புறயிலக்கண நூல்கள் கூறும் கருத்துகளோடு எந்தவகையில் ஒத்திருக்கிறது என்பதையும் இங்கு நாம் கண்டு கொண்டோம்.
Name

கட்டுரை,13,கவிதை,44,சிறுகதை,2,
ltr
item
காவியத்தமிழ்: சிலப்பதிகாரத்தில் காணலாகும் புறத்திணைக் கூறுகள்
சிலப்பதிகாரத்தில் காணலாகும் புறத்திணைக் கூறுகள்
சிலப்பதிகாரத்தில் இருக்கும் புறத்திணை கூறுகள் பற்றிய கட்டுரை
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5s27IMHlYJ9qv7VULbE76J04YTPFmKRQJ46Svc-zk7X9WKcXFr0KsBM65m4YPdIYchWjBsKqEMCSyI5P3WXNPbnuZfxhvXSBceV175adO_OtN54bhBSh_aSn-GAU22Ed_fLy39EQrgy8F/w640-h435/1661354986959851-0.png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5s27IMHlYJ9qv7VULbE76J04YTPFmKRQJ46Svc-zk7X9WKcXFr0KsBM65m4YPdIYchWjBsKqEMCSyI5P3WXNPbnuZfxhvXSBceV175adO_OtN54bhBSh_aSn-GAU22Ed_fLy39EQrgy8F/s72-w640-c-h435/1661354986959851-0.png
காவியத்தமிழ்
https://www.kaaviyatamil.com/2022/08/blog-post.html
https://www.kaaviyatamil.com/
https://www.kaaviyatamil.com/
https://www.kaaviyatamil.com/2022/08/blog-post.html
true
6069112678454011421
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL மேலும் படிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content