மனிதனின் குறைகளை மட்டுமே காணும் பார்வைகளை பற்றி , விரிசல் வாயிலில் கூறும் கவிதை
இத்தகைய விரிசல்
என்னுடைய தவறல்ல!
உளியும் சுத்தியும்
கோபித்த வேலையில்,
தவறிய கற்களில்
நானும் ஒன்று!
எங்கும் எதிலும்
இன்பம் புதைத்தவன் ,
என்னைச் செதுக்கும்போது
இரசனைகெட்டுப் போனான்!
மின்னல் வானை
வெட்டியது போன்று ,
என்னை வெட்டின
கம்மியன் கரங்கள் !
ஆயிரம் ஆயிரம்
செதுக்கிய விரல்கள்,
என்னைச் செதுக்கையில்
அடிசறுக்கிப் போனது!
விரிசலைக் கண்டே
விமர்சித்தது உலகம்,
விரிசலை விலக்கி
வதனப்பொலிவைக் காணாமல்!
மற்ற சிற்பங்களின்
ஏளனங்கள் ஏராளம்,
ஒன்றும் செய்வதற்கில்லை
உண்டு ஒரு பதில் !
உன்னைச் செதுக்கியவனும்
என்னுடைய சிற்பி தான் !